பூங்கோதை மேட்டர் அரசுக்கு அபாய மணி-கம்யூ.
திண்டுக்கல் உறவினருக்கு பரிந்துரை செய்த விவகாரத்தில் அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா கடிதம் அளித்திருப்பது திமுக அரசுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதையின் விவகாரம் வெளிவந்ததால் அதன் விளைவு ராஜிநாமாவாக மாறியுள்ளது. இந்த பிரச்னையை முதல்வர் ஆழமாக கவனிக்க வேண்டும்.
நல்ல திட்டங்கள் மட்டுமின்றி அமைச்சர்களின் நாணயமிக்க செயல்பாடுகள்தான் திமுகவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெருக்கும். இல்லை என்றால் ஆதரவு சுருங்கும். எனவே அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்த பிரச்னையில் முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இரண்டாண்டு கால திமுக ஆட்சியில் எங்களை பொருத்த வரையில் மத நல்லிணக்கம், சமுதாய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், ரேஷன் கடைகளில் கிலோ ரூ.2க்கு அரிசி விநியோகம், வேலை வாய்ப்பற்றவர்களுக்கு உதவித் தொகை, ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தது போன்றவற்றில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
அதே நேரத்தில் ஆட்சியின் ஜனநாயகத் தன்மையில் பெரும் முன்னேற்றம் காணப்பட வேண்டும். சுகாதார குறைபாடுகள், அரசு மருத்துவமனைகள் சரிவர இயங்குவதில் தடங்கல், தனியார் மருத்துவமனைகளை மககள் நாடி செல்ல வேண்டிய கட்டாயம், என்கவுன்டர் என்ற பெயரில் பலவிதமான தவறுகள், கொலைகள் போன்றவை கவலை தரக் கூடியவைகளாகும்.
இவற்றை அரசின் தவறுகள் என்று கூற முடியாது. ஜனநாயக அடிப்படை காரணமாக இந்த பிரச்னைகள் நடக்கின்றன. மாவட்ட பஞ்சாயத்து செயல்படுவதை போல காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
அரசு உத்தரவுகளால் சாதிக்க முடியாததை கண்காணிப்புக் குழுக்களால் சாதி்க்க முடியும். உதாரணமாக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற சிறந்த திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைவதற்குள் இடைத்தரகர்களால் மறிக்கப்படுகின்றன.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டால்தான் தமிழகம் சுபிட்சமாக இருக்கும் என்று வரதராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications