கிழக்கு மாகாண முதல்வராக பிள்ளையான் பதவியேற்பு

சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளை ராணுவம் மீட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி அங்கு தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் ராஜபக்சேவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்தால் தமிழர் ஒருவரே முதல்வர் ஆவார் என ராஜபக்சே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கு கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இருப்பினும் ஏற்கனவே கூறியபடி தமிழரையே முதல்வராக்கியுள்ளார் ராஜபக்சே.
அதன்படி புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனிக் கட்சி தொடங்கியவரான கருணாவின் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையான் முதல்வராகியுள்ளார். அவருக்கு நேற்று அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1987ம் வருடத்திய இந்திய இலங்கை ஒப்பந்தப்படி தனித் தனியாக இருந்து வந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஆனால் 2006ம் ஆண்டு இந்த இணைப்பு செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இரு மாகாணங்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன.
இங்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 37 இடங்களில் ஆளும் கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது.
முதல்வராகியுள்ள பிள்ளையான், கருணா மீது அதிருப்தியுடன் இருந்தவர்களின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவரானவர். அவர் மீது பெரும்பான்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ள தமிழ் எம்.பிக்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆள் கடத்தல், படுகொலை, சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு பிள்ளையான்தான் காரணம் என்பது முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. அரசு ஆதரவுடன், தமிழ் எம்.பிக்களுக்கு மிரட்டல் விடுப்பது, கடத்துவது உள்ளிட்ட செயல்களை பிள்ளையான் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் பெரும்பான்மை தமிழர்களின் வெறுப்புக்கு ஆளான பிள்ளையான் கிழக்கு மாகாண முதல்வராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications