போலி விசா: 3 சாமியார்கள் உள்பட 5 பேர் கைது
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற 3 சீக்கிய சாமியார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயல்வோர் மீது சமீப காலமாக கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை புளோராவை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த 3 சீக்கிய சாமியார்கள் உள்பட 5 பேர் போலி விசா பெற முயன்றதாக கைதாகியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த அர்ஜூன் சிங், ஹரியாணாவைச் சேர்ந்த ஹர்சரன் சிங், அமர்ஜித் சிங் ஆகிய மூன்று சீக்கிய சாமியார்களும் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்றனர். அமெரிக்காவில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாராவில் நடைபெறும் விழாவில் தங்களுக்கு பணியாற்ற அழைப்பு விடுத்திருப்பதாக 3 பேரும் தங்களது விசா விண்ணப்பத்தில் கூறியிருந்தனர். இதுதொடர்பான நியமன உத்தரவையும் அவர்கள் இணைத்திருந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் விசாரித்தபோது அப்படி எந்த நியமனமும் செய்யப்படவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக 3 பேரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல போலி ஆவணங்களைக் காட்டி விசா பெற முயன்றதாக மேலும் இருவரும் நேற்று பிடிபட்டனர்.












Click it and Unblock the Notifications