தியாகராஜ பாகவதர் மனைவிக்கு அரசு ரூ. 1 லட்சம் உதவி
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
எம்.கே.தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள் வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்.
இதையடுத்து தனக்கு உதவக் கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து உடனடியாக ரூ. 1 லட்சம் வழங்க கருணாநிதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ராஜாம்பாளிடம் அந்த நிதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தமிழ்த் திரையுலகில் மிகுபுகழ் பெற்று விளங்கியவர் பழம்பெரும் நடிகர் மறைந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரது மனைவி ராஜாம்பாள் அம்மையார் வறுமை நிலையில் வாழ்வதறிந்து 1999ம் ஆண்டில் தமிழக அரசு சார்பில் அவருக்கு முதல்வர் கருணாநிதி ரூ.50,000 நிதியுதவி வழங்கினார்.
தற்போது ராஜாம்பாள் மிகுந்த வறுமையுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் மேலும் உதவி கோரி எழுதியுள்ள கடிதம் நேற்று வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட கருணாநிதி ஆணையிட்டார்.
முதல்வரின் இந்த ஆணையின்படி, சென்னை மாவட்ட கலெக்டர் சூளைமேட்டில் உள்ள ராஜாம்பாள் அம்மையாரின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நேற்றே வழங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications