சென்னை மீனவர் நடுக் கடலில் திடீர் சாவு
சென்னை: சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர், நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை, காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் கருத்தாப்பிள்ளை (56). இவருக்கு கலா என்ற மனைவியும், தினகரன், ஜெகன், புனிதன் என்ற மூன்று மகன்களும், சிவகாமி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 30-ந் தேதி தனசீலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் கருத்தாப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நடுக் கடலில் அவர்கள் மீன் பிடிக்க ஆரம்பித்தனர். அப்போது திடீரென கருத்தாப்பிள்ளை மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த சக மீனவர்கள், கருத்தாப் பிள்ளைக்கு முதலுவதி அளித்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே கருத்தாப் பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு அங்கிருந்தபடியே மீனவர்கள் தகவல் தந்தனர். உடனடியாக கரைக்குத் திரும்பினர். அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கருத்தாப்பிள்ளையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.