எம்.பி.பி.எஸ்ஸை விட பி.இக்கு அதிக டிமாண்ட்
தமிழகத்தி்ல் மருத்துவம், என்ஜினீயரிங், கால்நடை மருத்துவம், ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கு இந்த ஆண்டு மொத்தம் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பொறியியல் கல்வியி்ல் சேரவே அதிகம் பேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.
எம்பிபிஎஸ்சை விடவும் கம்ப்யூட்டர், மின்னணுவியல் உள்ளிட்ட பொறியில் படிப்புகளுக்கே அதிக டிமாண்ட் நிலவுகிறது.
எம்பிபிஎஸ் முடித்தால் அரசு வேலையில் சராசரியாக வெறும் ரூ.12,000 தான் ஊதியமாகக் கிடைக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் ஊதியம் கொஞ்சம் அதிகம். குடும்பத்தினரே மருத்துவமனைகள் நடத்தினால் தான் இந்தத் துறையில் செட்டில் ஆவது எளிதாக உள்ளது. மற்றபடி தனியாக பிராக்டிஸ் செய்து முன்னுக்கு வர நெடுங்காலமாகி விடுகிறது.
மேலும் வெறும் எம்பிபிஎஸ்ஸால் பயனில்லாத நிலை உள்ளது. அதற்கு மேல் ஸ்பெஷலைஸ் செய்து மேற்படிப்பு படித்தாக வேண்டும். இதற்கு ஆகும் செலவும், காலமும் அதிகம்.
அதே நேரத்தில் 4 வருட பொறியியல் கல்வி, குறிப்பாக கம்ப்யூட்டர் கல்வி பயின்றால் கேம்பஸ் இன்டர்வியூலேயே வேலை கிடைப்பதாலும், ஊதியமும் அதிகமாக இருப்பதும் இந்தத் துறைகளிலே சேரவே மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடந்த வருடம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த சுமார் 100 மாணவர்கள் அதை விட்டுவிட்டு என்ஜினீயரிங்கில் சேர்ந்தனர். அதே நிலை இப்போதும் ஏற்படும் எனத் தெரிகிறது.
மேலும் கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, சித்தா போன்ற படிப்புகளில் சேரவும் மாணவர்களிடம் முன்பிருந்த ஆர்வம் இல்லை. இந்தத் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகம் இல்லாததே இதற்குக் காரணம்.
அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் கல்லூரிகளில் சேர அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கிற்கு 1.25 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 96,000 பேர்தான் விண்ணப்பித்திருந்தனர்.
மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர்.
மருத்துவ படிப்புக்கு 'மவுசு' இல்லை:
அதே நேரத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கு நேற்று வரை 5,000 விண்ணப்பங்களே விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டு 12,500 பேர் மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்ககது. இந்த ஆண்டு விண்ணபிக்க இன்னும் நாட்கள் இருப்பதால் 10,000 பேராவது விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கால்நடை மருத்துவம் படிப்புக்கு கடந்த 19ம் தேதி முதல் விண்ணப்பங்கள் விற்கப்பட்டு வந்தாலும் நேற்று வரை 750 தான் விண்ணப்பங்களையே வாங்கியுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர் படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 25,000 உள்ளன. நிர்வாக இட ஒதுக்கீட்டிலும் 25,000 உள்ளன.
இந்தப் படிப்புபுக்கு விண்ணப்பிக்க இன்றே (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். இதுவரை 40,000 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு மொத்தம் 46,000 விண்ணப்பங்கள் விற்பனையாயின என்பது குறிப்பிடத்தக்கது.