ஜஸீரா ஏர்லைன்சின் புது உத்தரவு: இந்தியர்கள் அதிருப்தி
துபாய்: இந்தியா மற்றும் இந்தியா வழியாக பயணம் செய்வோர், தங்களது சொந்த கிரெடிட் கார்டுகள் மூலமே ஆன்லைன் புக்கிங்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களது முடிவில் எந்தத் தவறும் இல்லை என்று குவைத்தைச் சேர்ந்த பட்ஜெட் விமான நிறுவனமான ஜஸீரா ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் விமானங்களில், இந்தியா மற்றும் இந்தியா வழியாக பயணம் செய்வோர், தங்களது சொந்த கிரெடிட் கார்டுகளில் தான் ஆன்லைன் புக்கிங்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அப்படிச் செய்யாத பயணிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.
ேமலும் விமான பயணித்தின்போது பயணிகள் தங்களது கிரெடிட் கார்டுகளை காட்ட வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
இதை அறியாமல், தங்களது உறவினர்கள், குடும்பத்தினரின் கிரெடிட் கார்டுகள் மூலம் டிக்கெட் பதிவு செய்தவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகிறார்கள்.
இதையடுத்து ஜஸீரா ஏர்வேஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இதை ஜஸீரா நிறுவனம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ஜஸீரா ஏர்வேஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் பாவாஸ் அலி சிர்ரி கூறுகையில், பல போலி கிரெடிட் கார்டுகள் இந்த மார்க்கத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால்தான் இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த முடிவில் எந்தத் தவறும் இல்லை, இதை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
ஆனால் பயணிகளோ, பிற மார்க்கங்களில் இந்த புதிய விதிமுறையை ஜஸீரா ஏர்வேஸ் அமல்படுத்தாமல், இந்திய மார்க்கத்தில் மட்டும் பயன்படுத்துவது பாரபட்சமானது என்று குற்றம் சாட்டுகின்றனர்.