வைகோ அணியே மதிமுக: தேர்தல் ஆணையம்
டெல்லி: வைகோவை பொதுச் செயலாளராகக் கொண்ட மதிமுகதான் உண்மையான மதிமுக என தேர்தல் ஆணையம் இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மதிமுக அவைத் தலைவராக இருந்த எல்.கணேசனும், இணைப் பொதுச்செயலாளர் செஞ்சி ராமச்சந்திரனும், வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து மதிமுக பொதுக்குழுவில் இருவரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எல்.கணேசன் தரப்பினர் போட்டி பொதுக்குழுவைக் கூட்டி வைகோவை நீக்கி தீர்மானம் போட்டனர்.
மேலும், வைகோவை தாங்கள் நீக்கி விட்டதாகவும், தங்களது தலைமையிலான மதிமுகவே உண்மையான மதிமுக என அறிவிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் எழுதினர்.
பதிலுக்கு வைகோவும் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் மதிமுகவின் 16வது பொதுக்குழுக் கூட்டத்தில், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும். பொதுக்குழு, செயற்குழு, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் தங்களுக்கே ஆதரவாக உள்ளதாக ஆதாரத்துடன் எடுத்துரைத்திருந்தார்.
இதையடுத்து இருதரப்பினரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் எல்.கணேசன் தரப்பிலிருந்து யாரும் விசாரணைக்கு வரவில்லை. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி விசாரணை நடந்தது.
அப்போது வைகோ ஆவண சான்றுகள், வீடியோ ஆதாரம் மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆஜராகி தனது தரப்பு வாதத்ைத எடுத்து வைத்தார். இதையடுத்து வைகோ தலைமையிலான மதிமுகவே உண்மையான மதிமுக என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.
அந்த முடிவை இன்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைகோவை பொதுச்செயலாளராக கொண்டுள்ள மதிமுகவே, உண்மையான மதிமுக.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் தரப்பு வாதத்திற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. எனவே அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications