தூத்துக்குடி துறைமுகத்தில் 3 ஆண்டுகளாக கிடக்கும் யு.எஸ். குப்பைகள்
கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து கழிவுத் தாள் என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்தது. நியூஜெர்சியிலிருந்து வந்த இந்த பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறங்கின.
அதில் 35 கண்டெய்னரில் இருந்த பொருட்கள் விஷத் தன்மை கொண்ட கழிவு பொருட்கள் என்று தெரிய வந்தது. அவை அமெரிக்க நகரங்களில் கிடந்த குப்பைகள் ஆகும். அங்குள்ள நகராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை சேகரித்து மூட்டை கட்டி இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இதில் பாலிதீன் பைகள், பயன்படுத்தாத பேட்டரிகள், பாட்டில்கள், பூச்சி மருந்து பாட்டில்கள், ஒயர் போன்றவை அடக்கம். இவை அனைத்தும் விஷத் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை.
இதனால் இவற்றை வெளியே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட வில்லை. எனவே அவை துறைமுகத்திலேயே தேங்கி கிடந்தன. மொத்தம் 890 டன் குப்பைகள் அவற்றில் இருந்தன. இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது.
எனவே இவற்றை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுற்றுச் சூழல் அமைப்புகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அதன் படி கோர்ட்டு அவற்றை திருப்பி அனுப்பும்படி உத்தரவிட்டது.
ஆனால் இதை ஏற்றி வந்த கப்பல் நிறுவனம் திரும்ப ஏற்றி செல்ல மறுத்து விட்டது. அனுப்பி வைத்த நிறுவனமும் இந்தக் கழிவுகளை ஏற்கவில்லை. எனவே 3 ஆண்டுகளாக அந்த குப்பைகள் அங்கேயே தேங்கி கிடந்து சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.
இந்தியாவை அமெரிக்கா குப்பைக் கிடங்காக பயன்படுத்தி வருவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.