பாமகவுடன் கூட்டணியைத் தொடர முடியாது: திமுக

சென்னையில் நடந்த திருமண விழா ஒன்றில் பேசிய மின்துறை அமைச்சரும், திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமி, பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குரு, திமுகவுக்கு எதிராக பேசிய பேச்சை மேற்கோள் காட்டி இத்தகைய கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் கருணாநிதி, பாமக-வுடன் கூட்டணியை தொடர்வது பற்றி நான்கைந்து நாளில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி முதல் மாநில மாநாட்டில் பேசிய கருணாநிதி, திமுக உயர்நிலைக் குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெறவுள்ளது என்றும், முக்கியமான பிரச்சனைகளில் சிலர் மட்டும் முடிவெடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். சிலர் அவசரப் படலாம். ஆனால், நான் அவசரப்பட்டு கட்சியை நடத்த முடியாது என்றும் கூறினார்.
இந்தச் சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் கூட்ட அரங்கில் திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் கூடியது.
முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட உயர் மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் கூடியுள்ளனர். கூட்டத்தில் பாமகவை கூட்டணியில் வைத்திருப்பதா, வேண்டாமா என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
காடுவெட்டி குருவின் பேச்சை உறுப்பினர்கள் போட்டுக் கேட்டனர். இதையடுத்து இனியும் பாமகவுடன் உறவைத் தொடர முடியாது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கேவலப்படுத்தி விட்டனர் - கருணாநிதி
கூட்டத்தில், பாமகவுடன் உறவை இனியும் தொடர முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி, தீர்மானம் குறித்து கூறுகையில், இழிவாக, தரக்குறைவாக, தன்மான உறவைப் பறிக்கும் வகையில் கேவப்படுத்தப்பட்டாலும், அத்தகைய ஒருகட்சி தலைமை அப்படி இழிவுபடுத்தியவர்களை, பேசியவர்களை தட்டிக்கேட்காமலும், அவர் மீது அந்தக் கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில் பேசியது தவறு, இத்தகைய கேவலமான வார்த்தைகளை பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்போ, வருத்தமோ கேட்காத நிலையிலும் கூட, அப்படி கேவலப்படுத்திகிறவர்களோடு, உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்பதை ஏற்க இயலாத காரணத்தால், அவர்களை இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனியும் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர் நிலை செயல் திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கிறது என்றார் கருணாநிதி.
இதன் மூலம் பாமகவுடனான தனது உறவை திமுக துண்டித்துக் கொண்டுள்ளது. பாமகவுடனான கூட்டணியை திமுக முறித்துக் கொண்டுள்து. தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திமுக, கூட்டணியில் விரிசல் விழுந்து விடக்கூடாது, அப்படி நேரிட்டால் அது அதிமுக- பாஜகவுக்கு சாதகமாகி விடும். எனவே கூட்டணி உடையாமல் திமுகவும், பாமகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டும் என இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதனால் திமுக உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கடைசி நேரத்தில் சமரசங்கள் செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பாமக உறவு இனியும் வேண்டாம் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications