திமுக உறவு முறிவு-பாமக அரசு வக்கீல்கள் ராஜினாமா
சென்னை: பாமகவுடனான உறவை திமுக முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பாமகவைச் சேர்ந்த கூடுதல் அரசு பிளீடர் மற்றும் நான்கு அரசு வக்கீல்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கூடுதல் அரசு பிளீடர் கே.பாலு, அரசு வக்கீல்கள் பி. கதிர்வேல், வி. கோபி ராஜா, எம்.ஆர்.ஜோதிமணியன், எம்.கே.டி. கோபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அரசு பிளீடர் ராஜா கலிபுல்லாவிடம் இன்று வழங்கினர்.
திமுக, பாமக உறவு முறிந்துள்ள நிலையில் இனிமேலும் திமுக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக விரும்பவில்லை என்று தங்களது ராஜினாமா கடிதங்களில் ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் திமுக அரசுக்கு பதவிக்கு வந்த பின்னர் இவர்கள் அரசு வக்கீல்களாகவும், கூடுதல் பிளீடராகவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வக்கீல்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தங்களது ராஜினாமா குறித்து கே.பாலு கூறுகையில், ஏற்றுக் கொள்ள முடியாத ஒருகாரணத்தைக் கூறி, பாமக தலைவர்கள் மீது அவதூறு பரப்பி திமுக கூட்டணியில் பாமக நீடிக்க முடியாது என்று திமுக கூறி விட்ட பிறகு, அரசு வக்கீல்களாக நாங்கள் நீடிக்க விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications