குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்க இழுபறி: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: 7 மாத கைக்குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் தேவையில்லாமல் இழுபறி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
ஓய்வு பெற்ற நீதிபதியும், சம்பந்தப்பட்ட குழந்தையின் தாத்தாவுமான தங்கப்பெருமாள் இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் எலிபே தர்மாராவ், வேணுகோபால் ஆகியோருக்கு இதுதொடர்பாக ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
தனது கடிதத்தில், எனது மகன் ஸ்ரீதர்குமார் சாப்ட்வேர் என்ஜீனியர். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். தனது மகளுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். தூத்துக்குடி மமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவின் மூலம் தனது விண்ணப்பத்தை கடந்த ஜனவரி முதல் வாரத்தில் அவர் அனுப்பியிருந்தார்.
சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து ஆட்சேபனை இல்ைல சான்றிதழைப் பெற்று அதை மே 15ம் தேதி பேக்ஸ் மூலம் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அசல் சான்றிதழை ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பினார்.
ஆனால் இதுவரை எனது பேத்திக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை. எனது பேத்திக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால், எனது மருமகளால் தனது மகளை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனது மகன் தற்போது சிங்கப்பூரில் உள்ளார். குடும்பத்தினர் ஒன்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்தக் கடிதத்தை ரிட் மனுவாகப் பாவித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஜூன் 20ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் அருள் வடிவேலுவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
--