பாமகவை விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை: எச். ராஜா
மயிலாடுதுறை: பாமகவை விமர்சிக்க திமுகவிற்கு அருகதை இல்லை என்று பாஜக மாநில துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.
அணு ஒப்பந்தம் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் இடதுசாரிகளும் ஆதரவை வாபஸ் பெறகூடும். இதனால் காங்கிரஸ் அரசு கலகலக்க துவங்கியுள்ளது. எனவே விரைவில் நாடு தேர்தலை சந்திக்க உள்ளது.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உள்பட அத்தியாவசிய பொருட்கள் கட்டுக்குள் இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு பண வீக்கம் 11 சதவீத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு சீரழியும் நிலை உருவாகியுள்ளது.
பங்கு சந்தையில் தீவிரவாதிகள் பணம் புழங்குவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. சுய நலத்துடன் செயல்பட்டு வருகிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தர்மத்தை மீறவில்லை. அவர் வெளியில் இருந்து தான் திமுகவிற்கு ஆதரவு அளித்து வந்தார்.
பாஜக ஆட்சியில் திமுக இடம் பெற்றிருந்தபோது, பெட்ரோல் விலை வெறும் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று கூட்டணியில் இடம் பெற்றிருந்த திமுக அமைச்சர்களே காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர்களுடன் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தினர்.
அது போன்று திமுக ஆட்சியை எதிர்த்து பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுடன் இணைந்து பாகம போராட்டம் நடத்தவில்லையே. எனவே பாமகவைப் பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications