5ம் தேதி கருணாநிதி டெல்லி பயணம்?
சென்னை: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகளுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையே நிலவி வரும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேச்சு நடத்த முதல்வர் கருணாநிதி 5ம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறவேற்றியே தீருவது என மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அவ்வாறு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் முக்கியக் கூட்டம் வரும் 4ம் தேதி நடக்கிறது. அதில் ஆதரவை வாபஸ் பெறுவது என முடிவெடுக்கப்பட்டால் மத்திய ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆனால் ஆட்சி கவிழ்வதையும், இடைத் தேர்தல்வருவதையும், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட பல கட்சிகள் விரும்பவில்லை. காரணம், தேர்தல் வந்தால் அதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவர்களிடம் இல்லாததே.
எனவே நெருக்கடிக்கு இடைக்கால தீர்வை ஏற்படுத்திட ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். குறிப்பாக முதல்வர் கருணாநிதி இதில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
மேலும், முலாயம் சிங் யாதவ், தேவே கெளடா, அஜீத் சிங் ஆகியோரின் ஆதரவைப் பெற காங்கிரஸ் கட்சியும் மறுபக்கம் முனைப்புடன் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஆனால், இதில் இடதுசாரிகள் பங்கேற்பது சந்தேகமே.
இந் நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி வருகிற 5ம் தேதி டெல்லி செல்வார் எனத் தெரிகிறது.
டெல்லி செல்லும் முதல்வர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி தற்போது மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு திமுக தீர்வு காண முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது.
இதற்கிடையே நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் நடை பெறுகிறது. இதில், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ எடுத்த முடிவைப் பின்பற்றி இறுதி முடிவு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை இடது சாரிகள் வாபஸ் பெற்றால், அரசுக்கு ஆதரவு கொடுத்து கவிழாமல் காப்பாற்றலாம் என்பது பற்றி முடிவு எடுக்க சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம்சிங் தலைமையில் வருகிற 3-ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications