பிரதமர் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்-அத்வானி
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பாஜக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் என பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் அத்வானி பேசுகையில், அரசைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சமாஜ்வாடி கட்சியுன் வர்த்தக பேரத்தை நடத்தி முடித்துள்ளது காங்கிரஸ். இது கண்டனத்துக்குரியது.
இதன் மூலம் அரசாங்கத்தை நடத்தும் அருகதையை பிரதமர் மன்மோகன் சிங் அரசு இழந்து விட்டது. பிழைப்புக்காக எந்தவகையான வர்த்தகத்தையும் நடத்த இந்த அரசு தயாராக உள்ளதையே இது காட்டுகிறது.
எல்லா வகையிலும், லோக்சபாவில் பிரதமர் மன்மோகன்சிங் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி நம்பிக்ைக வாக்கு கோர வேண்டும்.
இல்லாவிட்டால் பாஜக சார்பில் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்.
காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடிக் கட்சிகளின் நம்பகத்தன்மை ஆட்டம் கண்டுள்ளது என்றார் அத்வானி.
காங். கடும் கண்டனம்:
ஆனால் அத்வானியின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பொறுப்பே இல்லாமல் பேசுகிறார் நடக்கிறார் அத்வானி. அவரும், பாஜகவும் நிதானம் இழந்து விட்டனர். விரக்தி அடைந்து விட்டனர். இதனால்தான் இப்படிப்பட்ட கோரிக்கையை அத்வானி வைத்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications