கருணாநிதியின் அதிகார துஷ்பிரயோகம்: ஆதாரம் அனுப்ப ஜெ. உத்தரவு
சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள், ஊழல் உள்ளிட்டவை குறித்த தகவல்களையும், ஆதாரங்களையும் அதிமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அக்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
பல முதல்வர்கள்:
இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கு தமிழகத்தை ஆட்சி செய்வது ஒரு முதல்வர் அல்ல. கருணாநிதியின் குடும்பங்கள் அனைத்தில் இருந்தும் பல நபர்கள், அரசை ஆட்டிப்படைக்கும் முதல்வர்களாக இருக்கின்றனர்.
வட மாவட்டங்கள் மற்றும் நெல்லையில் ஸ்டாலின் ஒருமுதல்வராகவும், மதுரையில் அழகிரி ஒரு முதல்வராகவும் செயல்படுகின்றனர். இவற்றையெல்லாம் கண்டிக்க முடியாத நிலையில் முதல்வர் கருணாநிதி இருக்கிறார்.
இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற கவலையிலேயே, சதா சர்வகாலமும் மத்திய அரசு முடங்கிக் கிடக்கிறது. கருணாநிதி குடும்பத்தின் நடவடிக்கைகளை தேர்தல் நேரத்தில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.
அனைத்தும் அடங்கிய தகவல் தொகுப்பு உருவாக தமிழக மக்கள் அனைவரும் உதவ வேண்டும். ஊழல், முறைகேடு, வரம்பு மீறல், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை அனைத்தும் பற்றி உங்களுக்கு என்னென்ன விவரம் தெரியுமோ, அவை அனைத்தையும் எழுதி ஓர் உறையில், "மந்தணம்' எனக் குறிப்பிட்டு மூடி முத்திரையிட்ட அஞ்சல்கள் மூலம், "பொதுச் செயலர், அ.இ.அ.தி.மு.க., 275, அவ்வை சண்முகம் சாலை, சென்னை-14' என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்க வேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மீனவர்கள் பிரச்சினை: கருணாநிதிக்கு கண்டனம்
ஜெயலலிதா விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில், 45 நாள் தடைக்குப்பின்னர் கடந்த ஒரு மாத காலமாகத்தான் மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின் றனர். இந்த ஒரு மாத காலத்தில் பல முறை இலங்கை கடற்படை நமது மீனவர்களை பிடித்து வைத்து துன்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளது.
இலங்கை கடற்படையின் அராஜக செயல் காரணமாக தமிழக மீனவர்கள் இறப்பதும், காயம் அடைவதும், காணாமல் போவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இலங்கை கடற்படையின் இது போன்ற தொடர் அராஜக செயல்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில மைனாரிட்டி அரசு களை கண்டித்தும், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், வரும் 10ம் தேதி பாம்பன் பாலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்திலிருந்து கடந்த 27ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் கரைக்கு வந்து சேரவில்லை. அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது குறித்து, உறுதியான நடவடிக்கை எடுக்காத கச்சத்தீவை காவுகொடுத்த கருணாநிதிக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரிடமிருந்து பாதுகாக்க மத்திய அரசு உறுதியான, நிரந்தரமான நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்றோ, அல்லது குறைந்த பட்சம் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தோ மத்திய அரசை மிரட்டினால் அதனால் பயன் கிட்டும் என்று மீனவ மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடிதம் எழுதுகிறேன், தொலைபேசியில் பேசுகிறேன் என்று சொல்வதை எல்லாம் நிறுத்தி விட்டு வளம் கொழிக்கும் இலாக்காக்களை பெற எந்த முறையை கடைப்பிடித்து எவ்வளவு விரைவாக காரியத்தை சாதித்தீர்களோ, அதே முறையில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் சார்பில் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பிரச்சனை மேலும் தொடருமேயானால், அதிமுக பெரும் போராட்டத்தில் ஈடுபட தயங்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications