ஒரு வருடம் இழுத்தடித்த இடதுசாரிகள்- பாஜக
டெல்லி: 2007ம் ஆண்டு மத்தியிலிருந்தே மத்திய அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறப் போவதாக கூறி வந்த இடதுசாரிகள் ஒரு வருட காலதாமதம் செய்துள்ளனர். எதற்காக இந்த தாமதம் என்பதை அவர்கள் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணங்களாக பிரகாஷ் காரத் கூறியுள்ள அனைத்துமே 2007ம் ஆண்டில் அவர்கள் முதல் முறையாக வாபஸ் பெறப் போவதாக எச்சரித்தபோதே பொருந்தின. ஆனால் ஒரு வருட காலத்திற்குப் பிறகுதான் ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த கால தாமதத்திற்கு என்ன காரணம், எது அவர்களை தடுத்து வந்தது என்பதை நாட்டு மக்களுக்கு இடதுசாரிகள் விளக்க வேண்டும்.
இடதுசாரிகள் இத்தனை காலம் தாமதம் செய்ததற்கு, சமாஜ்வாடி கட்சி, காங்கிரஸுடன் நெருங்க வேண்டும் என்பதே காரணமாக இருக்க முடியும். ஆரம்பத்திலிருந்தே இடதுசாரிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணியாக இல்லை.
விலைவாசி உயர்வை கையாண்டது, பண வீக்கம், விவசாயிகள் பிரச்சினை, இளைஞர்நலம் என எதிலுமே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறப்பாக செயல்படவில்லை. இந்த அரசு போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்றார்.
அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் பாஜகவிடம் உள்ளதா என்றகேள்விக்கு பூனைக்கு யார் முதலில் மணி கட்டுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார் ரூடி.












Click it and Unblock the Notifications