அமர் சிங் ஆபாச பேச்சு: பெண்கள் அமைப்புகள் கொதிப்பு!
டெல்லி: சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து கூறிய ஆபாசமான வார்த்தைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அமர்சிங் பேசியபோது சில நிருபர்கள், காங்கிரஸுக்கும், சமாஜ்வாடிக்கும் இடையிலான புதிய உறவு குறித்து கேட்டனர். அதற்குப் பதிலளித்த அமர்சிங், பிரகாஷ் காரத், சோனியா காந்தியை சந்திக்கச் சென்றால் அது 'சுஹாஹ் ராத்' (கல்யாண இரவு). அதுவே நாங்கள் சோனியா காந்தியைப் பார்க்கப் போனால் 'பலாத்காரா?' (கற்பழிப்பா?) என்று பதிலளித்திருந்தார்.
அமர்சிங்கின் இந்தப் பேச்சு மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமர்சிங் மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார். சோனியா காந்தியை இழிவுபடுத்தி விட்டார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத் தலைவர் சுதா சுந்தரராமன், இந்திய மகளிருக்கான தேசிய சம்மேளனத்தின் தலைவர் ஆனி ராஜா, கில்ட் ஆப் சர்வீஸின் மோகினி கிரி, பெண்கள் திட்ட கூட்டுக் குழுவின் ஜோத்சனா சாட்டர்ஜி, இளம் பெண்கள் கிறிஸ்தவ அமைப்பின் கல்பனா டேவிட், மகளிர் மேம்பாட்டு ஆய்வு மையத்தின் மேரி ஜான் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு அமர்சிங்கை கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமர்சிங்கின் பேச்சு மிகவும் ஆபாசமானதாக உள்ளது. மோசமான கருத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அரசியல் தலைவர்களிடையிலான சந்திப்பை கொச்சைப்படுத்துவது போல உள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, கடும் கண்டனத்துக்குரிய பேச்சு இது.
இவ்வளவு மோசமான வார்த்தைகளால் ஒரு பொறுப்பான அரசியல் தலைவர் பேசுகிறார் என்பதையே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதிலும் நாட்டின் முக்கிய அரசியல் பெண்மணி ஒருவரை தரம் கெட்ட முறையில் சித்தரித்து அவர் பேசியிருப்பது சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்று. இதற்காக அமர்சிங் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications