தீவிரவாதிகளுடன் ஆர்காடு வீராசாமிக்கு தொடர்பு-ராமதாஸ்

பாமக மகளிர் மது ஓழிப்பு மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1967க்குப் பின் திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. இந்த நிலையை மாற்றி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்து ஆலோசனை கூறியுள்ளேன்.
குரு மீது குற்றச்சாட்டு கூறியவர்கள் புகாரை மறுத்து கருத்து தெரிவித்துள்ளனர். 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் தொடர்பாக டிஐஜி தலைமையில் 3 எஸ்பிக்கள், 500 போலீசாருடன் சென்று குருவை கைது செய்துள்ளனர்.
இதில் இவ்வளவு வேகம் காட்டிய தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்களை எரித்து கொலை செய்து பஸ்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது அன்று மாலையே ஜாமீனில் வெளிவரத்தக்க வகையில் சாதாரண வழக்கு பதிவு செய்தது எந்த வகையில் நியாயம். இதை சுட்டிகாட்டினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.
இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.












Click it and Unblock the Notifications