வீராசாமி கருணாநிதி குடும்ப அமைச்சரா?- ஜெ.
சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் நடவடிக்கைகளைப் பார்த்தால், இவர் மின்சாரத் துறை அமைச்சாரா? அல்லது முதலமைச்சரின் குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சாரா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணா மலை, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு திமுக அரசால் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
திமுக அரசின் அறிவிக்கப்படாத மின்வெட்டின் காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணை திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இன்னும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
இது போன்ற சூழ்நிலையில், மின்சார பம்ப் செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றால், முன் அறிவிப்பின்றி ஏற்படும் மின்சாரத் தடை காரணமாக, அதற்கும் வழியில்லாத நிலைக்கு தற்போது தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியோ, மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கையிலோ, கர்நாடகத்திடமிருந்து காவேரி நீரை கேட்டும் பெறும் முயற்சியிலோ ஈடுபடுவதாகத் தெரியவில்லை. மின்சார வெட்டு காரணமாக, சில இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் நீர் ஏற்ற முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப் பட்டுள்ளது.
திமுக அரசின் அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்திற்கு என்று ஓர் அமைச்சர் இருக்கிறாரா? என்கிற பலத்த சந்தேகம் தற்போது தமிழக மக்களிடையே நிலவுகிறது.
ஆற்காடு வீராசாமியின் அலட்சியப் போக்காலும், அக்கறை இன்மையாலும், மின்சார உற்பத்தி குறைந்து அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவரது நடவடிக்கையைப் பார்த்தால் இவர் மின்சாரத் துறை அமைச்சாரா? அல்லது முதலமைச்சரின் குடும்ப விவகாரங்களுக்கான அமைச்சாரா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவுகிறது. மின்சாரத் துறை அமைச்சர் தான் இப்படி இருக்கிறார் என்றால், முதலமைச்சரோ திரைப்படத் துறை சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலேயே தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
கருணாநிதியின் 'நாட்டு நலப் பணி'
"உளியின் ஓசை' திரைப்படத்திற்கு பிறகு, கருணாநிதியின் மற்றொரு கதையான 'பொன்னன் சங்கர்' என்ற கதையும் திரைப்படமாக வர இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன. எனவே, ஆற்காடு வீராசாமியின் கூற்றுப்படி கருணாநிதிக்கு மற்றுமொரு ""நாட்டு நலப் பணி'' காத்திருக்கிறது.
மின்சாரத் துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரின் இது போன்ற நடவடிக்கைகளால் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுபற்றி சற்றும் கவலைப்படாத திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதிக்கும், மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கும் எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சராக இருக்கின்ற கருணாநிதியும், மின்சாரத் துறை அமைச்சராக இருக்கின்ற ஆற்காடு வீராசாமியும், தங்களுக்கு தொடர்பில்லாத பணிகளில் நாட்டம் செலுத்துவதை விட்டு விட்டு, வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின்சார உற்பத்தியை பெருக்கவும், காவேரி நதிநீரை கர்நாடகத்திடமிருந்து உரிய காலத்தில் பெற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications