காடுவெட்டி குரு குண்டர் சட்டத்தில் கைது!
சென்னை: கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க தலைவரும், பாமக பொருளாளருமான காடுவெட்டி குரு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஒரு வருடத்திற்கு அவர் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காடுவெட்டி குரு கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதிமுக பிரமுகர் குணேசகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, ஆண்டிமடம் திமுக எம்.எல்.ஏ சிவசங்கருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, முன்னாள் பாமக பிரமுகர் செல்வி செல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டுகளை வீசியது ஆகிய வழக்குகள் அவர் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றில் கைது செய்யப்பட்ட குரு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவரை அந்த சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ராமதாஸ் இன்று திருச்சி சிறைக்கு வந்து காடுவெட்டி குருவை சந்தித்துப் பேசினார். இந்த சமயம் பார்த்து குரு மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது பாமகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரதமரிடம் புகார: ராமதாஸ்
முன்னதாக குருவை சந்தித்து விட்டு வெளியே டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம்ஒழுங்கு மிகவும் சீர்ழிந்துவிட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய காவல் துறையினர் பாமக மீது கவனம் செலுத்தி பொய் வழக்கு போட்டு வருகிறார்கள்.
காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஒரு துளி ஆதரமும் கிடையாது. ஆட்சி மாற்றம் வரும், போகும். ஆனால், மாவட்ட ஆட்சி தலைவர்கள் தான் நிரந்தரமாக அரசை நடத்தி செல்பவர்கள். எனவே, மாவட்ட ஆட்சி தலைவர்கள் நேர்மையாகவும், சட்டப்படியும் நடந்து கொள்ள வேண்டும்.
குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தால் பாமகவின் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், பிரதமர், உள்துறை செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து புகார் கொடுப்பார்கள். எனவே, மாவட்ட ஆட்சி தலைவர்கள் பலமுறை யோசித்து, எந்த உண்மையும் இல்லாத, எந்த குற்றமும் இல்லாத குரு மீது தவறான நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது.
'என் மீது கருணாநிதிக்கு கோபம':
திமுக அரசு மைனாரிட்டி அரசு. திமுக ஆட்சிக்கு பாஸ்மார்க் போடாததால் கருணாநிதிக்கு என் மீது கோபம். திமுக எப்போதும் பாஸ் மார்க் வாங்காது. 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்டாலும் திமுக பாஸ் மார்க் வாங்காது.
மத்தியில் உள்ள ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி நடத்தும். அடுத்த ஆண்டு மே மாதம் தான் தேர்தல் வரும் என்றார் ராமதாஸ். அவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணியும் வந்திருந்தார்.
முன்னதாக நேற்று குருவின் ஜாமீன் மனுவை அரியலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.












Click it and Unblock the Notifications