கட்டபொம்மனை அவமதித்து போஸ்டர்: தூத்துக்குடியில் போராட்டம்
தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனை அவமதித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் மற்றும் வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் திங்கள்கிழமை பறையர் பேரவை என்ற அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுதந்திர போராட்ட வீரர் ரெட்டை மலை சீனிவாசனின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் வீரபாண்டிய கட்டப்பொம்மனை அவமரியாதை செய்யும் வகையில் சில வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தச் சுவரொட்டிகள் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள், கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தினர் மற்றும் வீரசக்கதேவி ஆலயக் குழுவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள இந்த அமைப்புகளைச் சேர்ந்த 75 பெண்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள், கட்டப்பொம்மனை அவமதித்து சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வீரசக்கதேவி ஆலயக் குழுத் தலைவர் ஆர். ராமலிங்க ரெங்கசாமி தலைமை வகித்தார். செயலர் பி. சண்முகப் பெருமாள், பொருளாளர் பி. கணபதி சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு துரை, கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில கொள்கைப் பரப்புச் செயலர் வி. ராமலிங்கம், துணைத் தலைவர் பாஞ்சை கோபால்சாமி, வீரசக்கதேவி ஆலயக் குழு உறுப்பினர் முருகபூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் முக்கிய பிரமுகர்கள் சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பெ. அன்பரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். சாதி, சமய, இன, மொழி மோதலை தூண்டும் வகையில் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அவர்கள் மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications