இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் !
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி வருவது ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
அடிப்பது, துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்வது, மீன் பிடிக்க செல்லும், மீனவர்களிடம் உள்ள ஜிபிஎஸ் கருவிகள்,மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்வது ஆகியவற்றைக் கண்டித்து, இலங்கை அரசுக்கு எதிராக கடந்த 2 ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களிடம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஸ்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் இன்று மறியல் செய்யப் போவதாக மீனவ சங்கங்கள் அறிவித்திருந்தன. இருப்பினும் இதை கடைசி நேரத்தில் மாற்றிய மீனவர்கள், மறியலுக்கு பதில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
அதன்படி ராமேஸ்வரம் - பாம்பன் சாலையில், ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம், கோட்டைப்பட்டனம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications