நம்பிக்கை வாக்கு: பிரதமரை நிர்ப்பந்திக்கவில்லை-பாமக
டெல்லி: காடுவெட்டி குரு விவகாரத்தில் பிரதமருக்கு எந்தவித நிர்ப்பந்தத்தையும் பாமக தரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
அன்புமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர்.
இந்தக் குழுவில் ரயில்வே இணை அமைச்சர் வேலு, 5 எம்.பி.க்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் இடம்பெற்றிருந்தனர்.
அப்போது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ள வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் பிரதமரிடம் அவர்கள் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அதில், தமிழக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும், காடுவெட்டி குரு அரசியல் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை ரத்து செய்து அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிடவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அடுத்த மாதம் பிரதமர் கொழும்பு செல்லும்போது, தமிழக மீனவர் பிரச்சினையை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அந் நாட்டு கடற்படையினரின் சட்டவிரோத செயல்களை தடு்க்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இதேபோல, உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீலையும் சந்தித்து இந்த பிரச்சினைகள் குறித்து பாமக குழுவினர் பேசினர்.
பின்னர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், குரு கைது செய்யப்பட்டு இருப்பதை ரத்து செய்து அவரை உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடமும், உள்துறை மந்திரியிடமும் கேட்டுக் கொண்டோம்.
இது குறித்து தமிழக அரசுடன் பேசுவதாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், இந்த சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை அளித்து இருக்கிறோம். மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரிப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications