உயர்நீதிமன்றத்தில் ஏட்டை சரமாரியாக தாக்கிய வக்கீல்கள்
சென்னை: வக்கீல்களின் கொலை வெறித் தாக்குதலில் சிக்கிய தலைமைக் காவலர் ஒருவர், நீதிபதிகளின் அறைக்குள் புகுந்து அபயம் கேட்டதால், அங்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த இரு மூத்த நீதிபதிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு நீதிபதி முருகேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று இரு ஹேபியஸ் கார்பஸ் மனுக்கள், நீதிபதிகள் முருகேசன், பழனிவேலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தன.
முதல் மனு, கோவையைச் சேர்ந்த வக்கீல்கள் இளங்கோ, மணிவண்ணன், சின்னழகு மற்றும் ஜெயந்தி என்ற பெண் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான வழக்கு. இந்த வழக்கை ஜெயந்தியின் சகோதரர் தாக்கல் செய்திருந்தார்.
அதில், உள்ளூர்த் தகராறில், இவர்கள் நான்கு பேரையும் சரவணம்பட்டி போலீஸார் கடத்திச் சென்று விட்டதாகவும், நான்கு பேரையும் கோவை கணபதியில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து சித்திரவதை செய்ததாகவும், தற்போது நான்கு பேரும் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை தேடிக் கண்டுபிடித்துத் தரும்படி போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜெயந்தியின் சகோதரர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தரத்திற்குக் குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஜூலை 23ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஜெயந்தியை இன்ஸ்பெக்டர் சார்லஸ் துன்புறுத்தினாரா என்பது குறித்தும், லாட்ஜில் அவர்கள் நான்கு பேரும் விருப்பட்டே தங்கினார்களா என்பது குறித்தும் விசாரித்து தெரிவிக்குமாறும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
இந்த விசாரணைக்காக இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு தலைமைக் காவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இந்த வழக்கில் உத்தரவை பிறப்பித்த பின்னர் இன்னொரு ஹேபியஸ் கார்பஸ் மனு மீதான விசாரணைக்கு நீதிபதிகள் சென்றனர். அதுவும், கோவை மாவட்டம் சம்பந்தப்பட்டதுதான்.
சூலூர் போலீஸார் மீதான வழக்கு அது. இந்த வழக்கு விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்கிற தலைமைக்காவலர் நீதிமன்ற அறைக்கு வெளியே காத்திருந்தார்.
அப்போது ஒரு ஜூனியர் வக்கீல் அவரை நெருங்கி, ஹேபியஸ் கார்பஸ் விசாரணைக்காக வந்துள்ளீர்களா, கோவையிலிருந்து வந்துள்ளீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பழனிச்சாமியும் ஆமாம் என்று கூறியுள்ளார்.
அவ்வளவுதான் அடுத்த நிமிடமே அந்த ஜூனியர் வக்கீலும், அவருடன் வந்த மேலும் இருவரும் சேர்ந்து பழனிச்சாமியை சரமாரியாக தாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி நிலை குலைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு கோர்ட் ஹாலுக்குள் ஓடினார்.
வக்கீல்களின் கொலை வெறித்தாக்குதலிலிருந்து தப்பி உள்ளே ஓடி வந்த பழனிச்சாமியைப் பார்த்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.வக்கீல்களின் செயலுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும் காட்டமாக கூறினார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.
உடனடியாக தலைமை பதிவாளர், பதிவாளர் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் பழனிச்சாமி உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
தன்னை அடித்த வக்கீல்களின் பெயர் தெரியாது, ஆனால் ஆட்களை அடையாளம் காட்ட முடியும் என போலீஸாரிடம் பழனிச்சாமி தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த வக்கீல்களின் இந்த கொலை வெறித் தாக்குதல் சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் உயர்நீதிமன்றத்தில் இப்படி வக்கீல்கள் அநாகரீகமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்து கொள்வது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திரண்டு ஒரு டி.எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவரை, அரசு வக்கீலின் அறைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கினர்.
சரியாக ஒரு வருடம் கழித்து மறுபடியும் ஏட்டு ஒருவரை வக்கீல்கள் சரமாரியாக தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications