சோனியாவுடன் காங். எம்.பிக்கள் சந்திப்பு!

மன்மோகன் சிங் அரசு லோக்சபாவில் 21ம் தேதி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்கிறது. 22ம் தேதி தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அரசுக்கு ஆதரவான வாக்குகளை காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் திரட்டி வருகின்றன. இருப்பினும் எதிர்பாராத வகையில் போதிய ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் தடுமாற்றத்தைக் கண்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தற்போது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. சில எம்.பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக மறைமுகமாக கூறி வருகின்றனர்.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் எம்.பிக்களையும் டெல்லி வருமாறு சோனியா காந்தி அழைத்திருந்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லி வந்துள்ளனர். அனைவரும் சோனியா காந்தி வீட்டில் அவரை சந்தித்தனர். அவர்களுடன் சோனியா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து விவாதித்தார்.
இன்று இரவு அவர்களுக்கு விருந்தளித்து கெளரவிக்கிறார் சோனியா. இதையடுத்து நாளை பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் எம்.பிக்கள் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்புகளின்போது எத்தனை காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவாக உள்ளனர் என்பது குறித்தும் சோனியா காந்தி தெளிவுபடுத்திக் கொள்ளவுள்ளார்.
காங்கிரஸுக்குள்ளேயே அதிருப்தி நிலவுவதால் ஆதரவு எம்.பிக்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே சோனியா காந்தி அனைத்து எம்.பிக்களையும் அழைத்துள்ளார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications