கல்லூரி முதல்வர் மீது ரவுடிக் கும்பல் கொலை வெறித் தாக்குதல்
பழனி: கல்லூரி முதல்வரை கல்லூரிக்குள் புகுந்து ரவுடி கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியது. அந்தக் கல்லூரியை கைப்பற்றும் நோக்கில் சிலர் ரவுடிக் கும்பலை ஏவி இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளதால் பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சிக்கமநாயக்கன்பட்டியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி நிர்வாக தரப்பினர் இடையே கருத்து மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கல்லூரி முதல்வராக நாகர்கோவிலைச் சேர்ந்த ராசப்பன் என்பவர் புதிதாக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் திடீரென்று கல்லூரிக்குள் புகுந்தது. தன்னுடைய அறையில் இருந்த முதல்வர் ராசப்பனை அந்த கும்பல் பிடித்து சரமாரியாக தாக்கியது. இதில் நிலைகுலைந்த ராசப்பன் அறையை விட்டு வெளியேறி மைதானத்துக்கு ஓடினார்.
ஆனால் விடாமல் அவரைத் துரத்திச் சென்று தாக்கியது அந்த கும்பல். இதில் அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த மாணவர்கள் ஒன்று திரண்டு ரவுடி கும்பலை அடித்து விரட்டினர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஒடியது.
ஆவேசம் அடைந்த மாணவர்கள் பழனி-உடுமலைப்பேட்டை சாலையில் மறியல் செய்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாணவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டனர்.
சினிமா பாணியில் கல்லூரிக்குள் புகுந்து கல்லூரி முதல்வரை ரவுடிகள் தாக்கியது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியைக் கைப்பற்ற ஒரு தரப்பு முயற்சித்து வருகிறதாம். இதனால்தான் எதிர் தரப்பு நியமித்த முதல்வரை அடித்து பயமுறுத்தினால், கல்லூரி தங்களது பொறுப்புக்கு வந்து விடும் என்ற எண்ணத்தில் ரவுடிகளை அனுப்பி விட்டிருப்பதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
ரவுடிக் கும்பலின் இந்தத் தாக்குதலால் தற்போது கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications