சிபு சேரானுக்கு நிலக்கரித்துறை-காங். உறுதி
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், ஓட்டெடுப்பு முடிந்தவுடன் தனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் கூறியுள்ளார்.
ஐந்து எம்பிக்கள் கொண்ட இக் கட்சி ஒரு வழியாக தனது ஆதரவை மத்திய அரசுக்கு வழங்க முன வந்துள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய சிபு சோரன்,
நம்பிக்கை ஓட்டெடுப்பில் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பிக்களும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்போம். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தியின்படி, ஓட்டெடுப்பு முடிந்த பின், எனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி தருவதாகக் கூறியுள்ளனர்.
அதே போல ஒரு இணையமைச்சர் பதவியும் எங்கள் கட்சிக்குக் கிடைக்கும். ஆனால், அதை நான் யாருக்கு தருவேன் என்பதை இப்போது கூற முடியாது.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தந்தாலும் வசதி தான். அதை வரவேற்பேன்.
இனிமேல் எதிரணியான பாஜக கூட்டணி பக்கம் போகவே மாட்டேன். இங்கு பேச்சு சுமுகமாக முடிந்தபின் அங்கே கதவடைக்கப்படும் என்பது இயற்கை தானே என்றார்.