காங்-பாஜக சதி கூட்டணி- மாயாவதி புகார்
டெல்லி: நான் பிரதமராக வரக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் கூட்டணி அரசு வெல்ல பாஜக துணை போயிருக்கிறது என உ.பி. முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு அபார வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்புக்கு வராமல் இருந்ததாலும், சிலர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாலும், அரசின் வெற்றி சாத்தியமானது.
வாக்கெடுப்புக்கு முன்பே, மாயாவதியின் செல்வாக்கு பெருகி விடக் கூடாது என்பதற்காக அரசு கவிழ்வதை பாஜக விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் நடுநிலை வகிக்கலாம் என்றும் கூறப்பட்டது. நேற்று அதேபோலவே நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது கொள்கைகளால் வெற்றி பெறவில்லை. இந்த வெற்றி பகுஜன் சமாஜ் கட்சியை தடுக்க வேண்டும் மற்றும் தலித் பிரதமராவதை தடுக்க வேண்டும் எனும் கூட்டு சதியால் ஏற்பட்டதாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை இணைந்து இந்த சதித் திட்டத்தை தீட்டின. அத்வானி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காக இந்த இரு கட்சிகளும் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றன என்றார் அவர்.
இந் நிலையில் இன்று இடதுசாரிகள், மாயாவதி, மற்றும் மூன்றாவது அணியின் தலைவர்கள் டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளனர்.