அண்ணா-எம்.ஜி.ஆர் சிலைகள் சேதம்: ஜெ. கண்டனம்
சென்னை: காரைக்குடியில் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளை சேதப்படுத்திய விஷமிகளைக் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட சிலைகளுக்கு பதிலாக புதிய சிலைகளை அரசு நிறுவ வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
காரைக்குடி செக்காலை பகுதியில் உள்ள அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக சார்பில் போராட்டமும், போலீஸில் புகாரும் தரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த செயலுக்கு ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான மின்வெட்டுக்கு காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 25-ந் தேதி காரைக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர், சமூக விரோதிகள் மூலம் 25-ம் தேதி இரவு காரைக்குடி 2-வது தெருவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலையையும்,
காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலையையும் உடைத்து விட்டதாக செய்திகள் வந்துள்ளன. இந்த வன்முறைச் செயல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல உடைக்கப்பட்டுள்ள அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகமே உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
மக்கள் பிரச்சனையை முன்வைத்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தும் போது, அந்த பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரிய விஷயமாகும்.
இதுபோன்ற வன்முறைச் செயல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்து வதோடு மட்டுமல்லாமல் கூடுதல் பிரச்சனைகளை உருவாக்க வழி வகுக்குமே தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழி வகுக்காது.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் எந்த இடத்திலும் நிகழாத வண்ணம் தடுப்பதற்கு காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.