50 ஆண்டுகளாக திறக்கப்படாத லாக்கரில் 20 பைசா!
கோவை: கோவை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு லாக்கர் பெட்டியை வெல்டர்களை வைத்து உடைத்து திறந்து பார்த்தபோது அதில் வெறும் 20 பைசா மட்டுமே இருந்தது.
கோவை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இரும்பு லாக்கர் ஒன்று உள்ளது. இந்த பெட்டி கடந்த 1957ம் ஆண்டு திறக்கப்பட்டது. அதந் பிறகு அது திறக்கப்படவில்லை.
இந்த லாக்கர் ஆஸ்திரியாவில் உருவாக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. அதன் சாவி தொலைந்து போய் விட்டதால் லாக்கரை திறக்க முடியவில்லை. இதனால் அந்த லாக்கரை அப்படியே வைத்திருந்தனர்.
பூட்டுக்குப் புகழ் பெற்ற திண்டுக்கல்லில் இருந்தெல்லாம் ஆட்களைக் கூட்டி வந்து லாக்ரை திறந்து பார்க்க முயற்சித்தனர். ஆனால் திண்டுக்கல்காரர்களாலும் அது முடியாமல் போனது. இதனால் லாக்கரை திறக்கும் முயற்சி கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இப்படியாக 50 ஆண்டுகள் கடந்து போய் விட்டன. இந்த நிலையில், லாக்கரை திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டது. உடைத்தாவது திறந்து பார்க்க தீர்மானிக்கப்பட்டது. ஆட்சித் தலைவர் பழனிக்குமாரும் அதற்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து கேஸ் வெல்டிங் மூலம் லாக்கரை உடைத்தனர். பெரும் பணம் அல்லது பொக்கிஷம் அல்லது முக்கிய ஆவணம் ஏதாவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பால் லாக்கரை உடைப்பதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடி விட்டது.
புகைப்படக்காரர்கள், லென்ஸும், கண்ணுமாக உள்ளே இருப்பதைப் படம் பிடிக்க காத்திருந்தனர். பெட்டியை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் உடைத்துத் திறந்தனர்.
ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெறும் 20 பைசா நாணயம் மட்டுமே அதில் இருந்தது. அது போக 3 ரசீதுகளும் இருந்தன.
இவற்றை ஏன் இரும்பு லாக்கரில் போட்டு பூட்டி வைத்திருந்தனர் அக்காலத்து அதிகாரிகள் என்பது புரியவில்லை!!.












Click it and Unblock the Notifications