மும்பை எக்ஸ்பிரஸ் எழும்பூருக்கு மாற்றம்
சென்னை: சென்னை சென்டிரலில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சென்டிரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்வதிலும், வந்து சேருவதிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. மேலும், யார்டில் இருந்து காலி பெட்டிகளை கொண்டு வருவதிலும் பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து சில வெளி மாநில ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரலில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், இனி எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்டிரலில் இருந்து மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் (2164, 2165) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.