தூத்துக்குடி மாநகராட்சி நாளை உதயம்-10வது மாநகராட்சி

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு வரிசையில், சமீபத்தில் வேலூர் மாநகராட்சி தமிழகத்தின் 9வது மாநகராட்சியாக உதயமானது. இதையடுத்து 10வது மாநகராட்சி என்ற அந்தஸ்தை நாளை முதல் தூத்துக்குடி பெறுகிறது.
இதற்கான விழா தூத்துக்குடியில் பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கோலாகல விழாவில் முதல்வர் கருணாநிதி புதிய மாநகராட்சியை துவக்கி வைக்கிறார்.
இதற்கான விழா ஏற்பாடுகளை கவனிக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலின் நேற்றே தூத்துக்குடிக்கு வந்து விட்டார்.
புதிதாக உருவாக்கப்படும் தூத்துக்குடி மாநகராட்சியில் அடிப்படை வசதிகளான, குடிநீர் விநியோகப் பணிக்காக ரூ.1 கோடி, நகராட்சியின் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.4 கோடி, மேயர், துணை மேயர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு 6 கார்கள் வாங்க ரூ.57 லட்சம், முக்கிய சாலைகளின் சந்திப்பில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ரூ.80 லட்சம் உள்பட பல்வேறு முக்கிய பணிகளை குறிப்பிட்டு நிதி கோரப்பட்டிருந்தது.
இதை பரிசீலித்த அரசு, ரூ.16.49 கோடியில் ரூ.5 கோடியை மானியமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
மீதி தொகையை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து எடுத்து செலவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள பக்கீல் ஓடையை மேம்படுத்த ரூ.6.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு முன் வந்துள்ளது. இதற்கு, மானியமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications