தகவல் தராமல் தங்கியிருந்த 2 இலங்கைத் தமிழர்கள் சிக்கினர்
சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் காவல் நிலையத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைத்த தெரிவிக்காமல், லாட்ஜில் தங்கியிருந்த இரண்டு இலங்கைத் தமிழர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான தம்பி அண்ணன் கைதானார். நேற்று அமலன் உள்ளிட்ட இரண்டு விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு பெரியமேடு இன்ஸ்பெக்டர் பாண்டியன், விடுதிகளில் அதிரடி சோதனைகளில் மேற்கொண்டார். அப்போது ஒரு விடுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கியிருந்த சதீஸ்வரன் (வயது 28), ஜியாவுதீன் அகமது (வயது 40) என்ற இரண்டு இலங்கை தமிழர்கள் பிடிபட்டனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள காவல் நிலையத்தில் தங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை இவர்கள் கடைபிடிக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
சதீஸ்வரன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஜியாவுதீன் அகமது கொழும்பில் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியை நடத்தி வருபவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது.
சதீஸ்வரனை ரஷ்யாவுக்கு அனுப்புவதற்காக இருவரும் கடந்த ஜூன் மாதம் சென்னைக்கு வந்து பல்வேறு விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர். அந்த வரிசையில் கடைசியாக பெரியமேட்டில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது போலீசாரிடம் பிடிபட்டனர்.
அவர்களை பற்றி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.