கார் மீது ரயில் மோதி பெண் உள்பட 3 பேர் பலி
திருச்சி: திருச்சி அருகே கார் மீது ரயில் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் தமிழ்நாடு சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் பணியாற்றியவர் சந்திரசேகரன். இவருடைய மனைவி ராணி. இவர்களது மூத்த மகன் ராஜேஷ். துபாயில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 3ம் தேதி மதுரையில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து முதல் திருமண அழைப்பிதழை, திருச்சி எடமலைப்பட்டி அருகே உள்ள ரெட்டைமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில் வைத்து சாமி கும்பிடுவதற்காக சந்திரசேகரன், ராணி ஆகியோர் காரில் ரெட்டமலைக்கு சென்றனர். காரை வேலுச்சாமி ஓட்டினார்.
வழிபாடு நடத்தி முடித்த பின்னர் மீண்டும் அவர்கள் ஆலங்குளம் திரும்பினர். அப்போது பூங்குடி என்ற இடத்தில் உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கை கார் கடந்தபோது, எதிர்பாராதவிதமாக வேகமாக வந்து கொண்டிருந்த மயிலாடுதுறை - திருநெல்வேலி பாசஞ்சர் ரயில் கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் காரிலிருந்த ராணியும், வேலுச்சாமியும் தண்டவாளத்தில் எறியப்பட்டு உடல் சிதறி பலியானார்கள். பின் இருக்கையில் இருந்த சந்திரசேகரன் காரிலிருந்தபடியே நசுங்கி இறந்தார்.
இந்த விபத்தால் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு அப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களும் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.