காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: ஹூரியத் தலைவர் உள்பட 5 பேர் பலி
ஸ்ரீநகர்: அமர்நாத் கோவில் ஆதரவு போராட்டக்காரர்கள், நெடுஞ்சாலையை தடை செய்தனர். இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அமர்நாத் கோவில் நில விவகாரத்தில் நாளுக்கு நாள் கலவரம் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. அமர்நாத் ஆதரவாளர்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலையை தடை செய்து வருகின்றனர். இதனால் வெளிச்சந்தையில் தங்கள் பொருட்களை விற்க முடியவில்லை ஆயிரக்கணக்கான வியாபாரிகள் புகார் செய்தனர்.
இந்த நிலை நீடித்தால் உற்பத்தி பொருட்களை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி வழியாக அனுப்பப் போவதாக காஷ்மீர் வர்த்தக சங்கம் அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஹூரியத் மாநாட்டுக் கட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
போராட்டக்காரர்கள் குறிப்பிடும்படி பதன்கோட்-ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் எந்த தடையும் இல்லை என்றும், இந்த பாதையில் போக்குவரத்து சுமூகமாக இருப்பதாக மத்திய மாநில அரசுகள் தெளிவுபடுத்தின.
ஆக்ரமிப்பு காஷ்மீருக்குள் நுழைவது சரியல்ல என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஏற்கனவே எச்சரித்தார். இந்த நிலையில் ஆக்ரமிப்பு காஷ்மீருக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஸ்ரீநகர்-முஸாராபாத் நெடுஞ்சாலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், ஆயிரக்கணக்கா விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாராபாத்துக்கு ஊர்வலம் செல்ல முயன்றனர். ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் ஷேக் அப்துல் அஜீஸூம் (60) இதில் கலந்து கொண்டார்.
இதை போலீஸார் தடுத்தனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமானதை அடுத்து போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
அப்போதும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. போராட்டக்காரர்கள் போலீசாருடன் பயங்கரமாக மோதினர். இதையடுத்து ஸ்ரீநகர்-முஸாராபாத் நெடுஞ்சாலையில் பல்வேறு பகுதிகளில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஷேக் அப்துல் இறந்ததை அடுத்து காஷ்மீரில் மேலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சங்கராமாவில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு பகுதியில் பதட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வீட்டுக்காவலில் கிலானி, ஓமர்:
இந்நிலையில் காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சித் தலைவர்கள் கிலானி, மீர்வாய்ஸ் ஒஓமர், மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் மற்றும் 12க்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹூரியத் மாநாட்டு கட்சி நிர்வாகி அக்பர் கூறுகையில், கடந்த 4ம் தேதி முதலே எங்கள் கட்சித் தலைவர் சையது அலி ஷா கிலானியின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டனர். வெளியே செல்ல அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாள் சில மணிநேரம் இந்த தடை தளர்த்தப்பட்டது. அப்போது எங்கள் கட்சியை சேர்ந்த வாலிபர் போலீசாரால் கொல்லப்பட்டார். அந்த வாலிபரின் வீட்டுக்கு கிலானி சென்று ஆறுதல் கூறினார்.
வழிபாடு நடத்த மசூதிக்கு செல்ல கூட கிலானிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் முகமது அஷ்ரப் செராயியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
எங்கள் கட்சிக்கு சொந்தமான 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முஸாராபாத் நோக்கி ஊர்வலம் குறித்த அறிவித்த உடனேயே கடந்த 10ம் தேதி எங்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.
அக்கட்சியின் மற்றொரு தலைவரான மிர்வெய்ஸ் மௌல்வி ஓமரும் கடந்த 10ம் தேதி முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் ஷாகிதுல் இஸ்லாம் கூறினார்.
12க்கும் மேற்பட்ட பிரிவினைவாதிகள் நேற்று மாலை முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முஸாராபாத் ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications