மதுரையில் தென்னிந்திய மகப்பேறு டாக்டர்கள் மாநாடு
மதுரை: தென் இந்திய மகப்பேறு டாக்டர்களின் முதல் மாநாடு வருகிற 15 முதல் 17ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது.
மதுரை அரசு கல்லூரி மருத்துவமனை மகப்பேறு மருத்துவப் பிரிவு தலைமை பேராசிரியர் டாக்டர் ரேவதி ஜானகிராமன், டாக்டர்கள் பர்வதவர்த்னி, தில்ஷாத், ரேவதி கயிலைராஜன் ஆகியோர் கூறியதாவது:
தென் இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்டது மதுரை மகப்பேறு மருத்துவ கழகம்தான். இதில் சுமார் 220க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த மகப்பேறு டாக்டர்கள் சேர்ந்து தக்ஷிண் என்ற கூட்டமைப்பை கடந்த 2000ல் தொடங்கப்பட்டது.
இளைய மருத்துவர்களை ஊக்குவிப்பது மற்றும் தென்னிந்திய டாக்டர்களை இந்திய அளவில் முன்னிலைப்படுத்துவதுதான் இந்த கூட்டமைப்பின் முக்கிய குறிக்கோளாகும். அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தில் மாநாடு நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டு மதுரையில் முதல் முதலாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய மகப்பேறு டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை மகப்பேறு மருத்துவ கழகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது. முதல் நாள் டாக்டர்களுக்கான பயிலரங்கம் மதுரை அரசு மருத்துவமனையில் நடக்கிறது.
ஆகஸ்டு 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாடு தல்லாகுளம் பகுதியில் லட்சுமி சுந்தரம் அரங்கில் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்புராஜ் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள் கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும் முறைகள் பற்றியதாகும்.












Click it and Unblock the Notifications