மேட்டூருக்கு 1.4 லட்சம் கன அடி நீர் வரத்து
மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. தற்போது விநாடிக்கு 1 லட்சத்து 42 ஆயிரம் கன அடி நீர் மேட்டூருக்கு வந்து கொண்டுள்ளது.
கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபிணி ஆகிய அணைகளிலிருந்து விநாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 24 கன அடி நீர் வரத் தொடங்கியது.
அணையின் நீர் இருப்பு 71.79 அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 9.47 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 74 ஆண்டு கால மேட்டூர் அணை வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வருவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 1962 மற்றும் 1981 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும்தான் இதுபோல பெருமளவில் நீர் வந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் மேட்டூர் அணை நிரம்பி விடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெருமளவில் கர்நாடகத்திலிருந்து வரும் தண்ணீர் காரணமாக ஓகனேக்கலில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications