புனுகு பூனை-அனுமதி கோரும் திருப்பதி தேவஸ்தானம்!
திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வளாகத்தில் புனுகுப் பூனைகளை வளர்க்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோவில் நிர்வாக அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய புனுகு எனும் வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள்.
இதில் புனுகு கிடைப்பது தற்போது மிகவும் சிரம்மாகியுள்ளதாம். இந்த வாசனத் திரவியத்தை புனுகுப் பூனைகளின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் ஒருவித பிசினிலிருந்து தயாரிக்கிறார்கள்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூர்ணாபிஷேகத்துக்கே சற்றே சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம்.
புனுகு கொண்டு அபிஷேகம் செய்வதால், சுவாமி சிலை வழவழப்பாக அதே சமயம் கீறல்கள் ஏற்படாமல் பளிச்சென்றும் காட்சி தருமாம். இது கோயில் பராமரிப்பு சாஸ்திரம் என்பதால் அதை சரியாகக் கடைப்பிடிக்க கோவிலின் நிர்வாகம் அதிக செலவில் புனுகை வாங்கி வருகிறது.
இதைவிட புனுகுப் பூனைகளை வாங்கி வளர்ப்பதால் தேவையான அளவுக்கு புனுகு கிடைக்கும் என முடிவு செய்து மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளது தேவஸ்தானம்.
அழிந்து வரும் அரிய வகை விலங்குகள் பட்டியலில் உள்ள புனுகுப் பூனைகள் வளர்க்கவும், புனுகு சேகரிக்கவும் மத்திய அரசின் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications