தியாகிகள்- ஜெ. புகாருக்கு கருணாநிதி கண்டனம்

அரியலூர் மாவட்டம் முத்துசேர்வடம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம். 86 வயதாகும் இவர் சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். இவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிப்பதாக நேற்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தனக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தியாகி சுப்பிரமணியம் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
அவரது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. ஆனாலும் தமிழக அரசு அவரைக் கண்டு கொள்ளவில்லை.
தியாகி சுப்பிரமணியத்திற்கு அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ஆ.இளவரசன், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ராஜேந்திரன் ஆகியோர் முத்துசேர்வடம் கிராமத்தில் உள்ள தியாகி சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று அவரிடம் ஜெயலலிதா சார்பில் ரூ.1 லட்சத்தை வழங்கினார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெ. ஆட்சியில்தான் நடவடிக்கை இல்லை
ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையில், கடந்த 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் தியாகி சுப்ரமணியம் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் 2006ம் ஆண்டு ஆட்சியை விட்டுப் போகும் வரையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்த விண்ணப்பம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோப்புகளில் உறங்கிய கடிதம்
2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜெயலலிதா ஆட்சி இருந்தபோது, தியாகி சுப்ரமணிக்கு அதிமுக அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில், மாவட்ட ஆட்சித் தலைவரை உரிய ஆவணங்களுடன் சென்று சந்திக்குமாறு எழுதப்பட்டது. ஆனால் அந்தக் கடிதம் கடைசி வரை சுப்ரமணியை சென்றடையவே இல்லை. காரணம், அந்தக் கடிதத்தை அவர்கள் அனுப்பவே இல்லை. அது இன்னும் கோப்புகளில்தான் இருக்கிறது.
இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து விட்டு திமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார் ஜெயலலிதா.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்குமாறு சுப்ரமணியம் கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் அவர் எப்போது சிறையில் வாசம் அனுபவித்தார் என்பதற்கான சான்று இணைக்கப்படாததால், அவரது விண்ணப்பத்தை தியாகிகள் பென்சனுக்காக, மாநில அரசுக்கு பரிந்துரைக்க முடியாத நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அவரிடம் தெரிவித்தது.
அறிவிப்போடு நின்ற ஜெ.
கடந்த ஜெயலலிதா ஆட்சியில், பணியில் இருந்தபோது இறந்த ஒரு காவலரின் குடும்பத்தினர், திமுக ஆட்சிக்கு வரும் வரை காத்திருந்து, அதன் பின்னர் இழப்பீட்டு தொகையாக ரூ. 1 லட்சம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த நிதியுதவியைக் கூட ஜெயலலிதாதான் அறிவித்தார். ஆனால் அறிவித்ததோடு சரி, அதைக் கொடுத்தது திமுக அரசுதான்.
2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த ஆயுதப் படைக் காவலர் பணியில் இருந்தபோது இறந்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடுத்த நாளே ரூ. 1 லட்சம் தருவதாக அறிவித்தார். ஆனால் அதுதொடர்பான கோப்பு ஜெயலலிதா ஆட்சிக்காலம் முடியும் வரை கிளியர் செய்யப்படவே இல்லை.
திமுக 2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜூன் 11ம் தேதி அந்தக் கோப்பைப் பார்த்து, அந்த நிதியுதவி காவலரின் குடும்பத்திற்கு அனுப்பப்பட்டது. இப்படிப்பட்ட ஜெயலலிதாவுக்கு, தாமதம் குறித்து புகார் கூறுவதற்கு எந்த அருகதையும் இல்ைல.
தியாகிகளை கெளரவித்த திமுக அரசு:
தியாகிகளை திமுக அரசு கெளரவிக்கவில்லை, அவர்களது நலனில் அக்கறை காட்டவில்லை என்று கூறுவதை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். அதிமுக ஆட்சியில்தான் தியாகிகள் நல்ல முறையில் பார்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டையும் மறுக்கிறேன்.
காமராஜரின் பிறந்த நாளை தியாகிகள் தினமாக அறிவித்தது திமுக அரசுதான். இதுதொடர்பாக சட்டத்தை இயற்றியதும் திமுக அரசுதான்.
சுதந்திர தின பொன்விழாவையொட்டி தியாகிகள் மற்றும் மொழிப் போர் தியாகிகளுக்குரிய ஓய்வூதியத்தை ரூ. 1500 லிலிருந்து ரூ. 3000 ஆக உயர்த்தியதும் திமுக அரசுதான்.
மேலும் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் இந்த ஓய்வூதியத் தொகை மேலும் உயர்த்தப்பட்டு ரூ. 4000 ஆக அறிவிக்கப்பட்டது.
அதேபோல,தியாகிகளுக்குரிய குடும்ப ஓய்வூதியத்தை 1997ம் ஆண்டு ரூ. 750லிருந்து ரூ. 1500 ஆகவும், பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் ரூ. 2000 மாகவும் அதிகரித்ததும் திமுக அரசுதான்.
தியாகிகளுக்கும், மொழிப் போர்தியாகிகளுக்கும் நினைவிடங்கள் அமைத்ததும் திமுக அரசுதான் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications