கள்ளச் சாராயம் விற்க ஏலம்!-நாட்டாமை கைது
தர்புரி: தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கள்ளச் சாராயம் விற்க ஏலம் விட்ட ஊர் நாட்டாமையை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ளது ஈ.பி. தண்டாமலை. இந்த கிராமத்தில் கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனையாகி வந்தது.
இதனால் சாராய விற்பனையை 'முறைப்படுத்த', ஏலம் நடத்த ஊர் நாட்டாமை முனுசாமி முடிவு செய்தார். அதன் பேரில் முனுசாமி தலைமையில் ஊர் கூட்டம் கூட்டி சாராயம் விற்க ஏலம் விடப்பட்டது.
ஏலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் ராமன், சின்ராஜ், ரத்தினம்மாள், முடாக் ஆகியோர் ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் வைரக்கண்ணு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் ஈ.பி. தண்டாமலை கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்க ஊர் நட்டாமை ஏலம் விட்டது உறுதியானது. அதன் பேரில் முனுசாமி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு உதவியாகவும், சாராயம் விற்க ஏலம் எடுத்தவர்களுமான சாராய வியாபாரிகள் ராமன், சின்ராஜ், ரத்தினம்மாள், முடாக் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயத்திற்கு பலரை பறி கொடுத்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை விற்க ஏலம் விடப்பட்ட சம்பவம் போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications