பிரச்சனைகளை கம்யூ. கட்சிகள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்: கருணாநிதி

கம்யூனிஸ்ட் கட்சிகள் அடுத்த தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆற்காடு வீராசாமி பேசியிருப்பது அதிகப்படியானது, திமுகவின் அணுகுமுறைக்கு மாறானது என்று முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார். அதேசமயம், தேவையில்லாமல் பிரச்சனைகளை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக உறவு குறித்து தங்கள் கட்சிகளின் மாநிலக் குழுவில் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பொருளாளர் ஆற்காடு வீராசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று பேசியிருப்பது சற்று அளவுக்கு மீறியது மட்டுமல்ல, நாம் கடைபிடித்து வரும் அணுகுமுறைகளுக்கும் முரணானது.
அண்மைக் காலமாகவே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே திமுக கொண்டிருந்த தோழமைக்கு முற்றிலும் மாறான செய்திகளை வெளியிடுவதும், கேலிச் சித்திரங்களை வரைவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சில பிரச்சனைகளை ஊதி பெரிதாக்குகிறார்கள்.
விமர்சனம் வேண்டாம்:
ஆனாலும் இடதுசாரிகள் முடிவை அறிவிக்கும் வரை திமுகவினர் அவசரப்பட்டு விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம்.
மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் பாஜகவுடன் திமுக தேர்தல் உறவு கொண்டது நியாயம்தானா என்று கேட்டிருக்கிறார். காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், மாநிலத்துக்கு மாநிலம் முரண்பாடு கொண்ட கூட்டணிகள் எவை? எவை? அவை எப்போது என்ற விவாதத்துக்கு நான் தயார்.
பாஜகவுடன் திமுக அணி சேர்ந்தபோது குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு அதில் இரு தரப்பிலும் கையெழுத்திடப்பட்டது. அந்த திட்டத்தில் மதச்சார்பு அரசியலுக்கு இடமில்லை. அதிலிருந்து அவர்கள் விலகியபோது பாஜக அணியிலிருந்து திமுக வெளியேறிவிட்டது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications