காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சிரஞ்சீவி இன்று யாகம்
காஞ்சிபுரம்: புதுக் கட்சி தொடங்கவுள்ள தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இன்று தனது அரசியல் வாழ்க்கை வெற்றி பெற வேண்டி யாகம் நடத்துகிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சியை வருகிற 26ம்தேதி தொடங்கவுள்ளார். அன்றைய தினம் திருப்பதியில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்தில் கட்சிப் பெயர், கொடி, கொள்கை ஆகியவற்றை அவர் வெளியிடவுள்ளார்.
அதற்கு முன்பாக கட்சியும், அரசியல் வாழ்க்கையும் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிரஞ்சீவி குடும்பத்தினர் முக்கிய கோவில்களில் வழிபாடுகள், பூஜைகள் நடத்தி வருகின்றனர்.
சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, சமீபத்தில் மந்த்ராலாயம் சென்று ராகவேந்திரர் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
இந்த நிலையில், சிரஞ்சீவி இன்று காஞ்சிபுரம் வருகிறார். அங்குள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சதகண்டி ஹோமத்தில் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று காலை சென்னைக்கு வரும் சிரஞ்சீவி அங்கிருந்து காரில் காஞ்சிபுரம் செல்கிறார்.
இந்த நிலையில் நேற்று காலை சதசண்டி ஹோமம் சப்தசசி பாராயணம் நடந்தது. இதில் 35 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்த நடிகை சந்தனா கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சாஸ்திரி நடனம் அய்யர், அம்பாள் பிரசாரதங்களைக் கொடுத்து பட்டாடை அணிவித்தார்.
இன்று நடைபெறவுள்ள யாகத்திற்காக பெரிய ஹோம குண்டம் வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி வரை கோவிலில் சிரஞ்சீவி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications