முஷாரப்புடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 6ம் தேதி நடக்கிறது.
வேட்பு மனுத் தாக்கல் இம் மாதம் 26ம் தேதி தொடங்கும் என அந் நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பர்வேஸ் முஷாரப் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து இந்தத் தேர்தல் நடக்கிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவரும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரியை அதிபர் பதவிக்கு தேர்வு செய்ய அக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஆனால், பலுசிஸ்தான், வட மேற்கு எல்லைப்புற மாகாணம் போன்ற சிறிய மாகாணத்தைச் சேர்ந்தவர் தான் அடுத்த அதிபராக வேண்டும் என நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி கூறியுள்ளது.
இதனால் சர்தாரி அதிபராக அக்கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே இந்த விஷயத்தில் உடன்பாடு ஏற்படாவிட்டால் இருவருமே தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
முஷாரப்புடன் புஷ் போன் மூலம் பேச்சு:
இந் நிலையில் பாகிஸ்தானில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் கிலானியிடம் போன் மூலம் அமெரிக்க அதிபர் புஷ் விசாரித்தார்.
மேலும் முன்னாள் அதிபர் முஷாரப்பிடமும் புஷ் போனில் பேசினார். அப்போது, அல்கொய்தா, தலிபான்களுக்கு எதிராக போராடியதற்காக முஷாரப்புக்கு புஷ் நன்றி தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் தனது பதவியைக் காக்க முயன்று போராடிய முஷாரப் தொலைபேசி மூலம் கூட புஷ்ஷுடன் பேச முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்சுடன் பேச முயன்று முஷாரப் பல முறை தோற்றது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் தான் பதவி போன பின் அவரைக் கூப்பிட்டு ஆறுதல் கூறியுள்ளார் புஷ்.












Click it and Unblock the Notifications