ஓகனேக்கல் திட்டத்தை நிறுத்தக் கோரி பிரதமரை சந்திக்க கர்நாடகம் முடிவு
பெங்களூர்: தமிழக அரசு ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அனைத்துக் கட்சி குழுவினருடன் முறையிடப் போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முனைந்துள்ளது. ஆனால் இதற்கு கர்நாடக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்த நிலையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரிடம் முறையிடப் போவதாக அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெகரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கர்நாடகம் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் கர்நாடகத்தின் எதிர்ப்பையும் மீறி திட்டத்தை தொடரப் போவதாக தமிழகம் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி செப்டம்பர் முதல் வாரம், அனைத்துக் கட்சிக் குழுவுடன் பிரதமரை சந்தித்து கர்நாடகம் வலியுறுத்தும்.
நதி நீர்ப் பங்கீட்டில் மற்ற அனைத்து மாநிலங்களும் கர்நாடகத்துடன் சுமூகமாக இருக்கின்றன. ஆனால் தமிழகம் மட்டும்தான் பிடிவாதம் பிடிக்கிறது என்றார் பொம்மை.












Click it and Unblock the Notifications