குடைந்த நிருபர்கள்-பதில் சொல்லாமல் தப்பிய ராமதாஸ்
சென்னை: திமுக கூட்டணிக்கு பாமக திரும்புமா என்பது குறித்து நிருபர்கள் இன்று தொடர்ந்து கேள்வி கேட்டபோதும், பதிலளிக்க ராமதாஸ் மறுத்துவிட்டார்.
இரண்டு நாளைக்குப் பின் இது குறித்து பேசுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று காலை பிரஸ் மீட்டுக்கு ராமதாஸ் அழைக்கவே, திமுக கூட்டணி குறித்துத் தான் ஏதோ சொல்லப் போகிறார் என நிருபர்கள் படையெடுத்தனர். வழக்கத்தைவிட அதிகமாக வட இந்திய மீடியாக்களும் அங்கு குவிந்தன.
ஆனால், மது ஒழிப்பு குறித்து ராமதாஸ் விளக்கமாக பேசினார். அவர் பேசி முடித்தபின் திமுக கூட்டணிக்கு பாமக திரும்புமா, மீண்டும் வருமாறு முதல்வர் அழைத்துள்ளாரே என நிருபர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க, இன்று மது ஒழிப்பு மட்டும் பேசுவோமே என்றார் ராமதாஸ.
ஆனாலும் விடாமல் நிருபர்கள் குடையவே, தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என இரு நாட்களுக்கு முன்னரே சொல்லி விட்டேனே என்று கூறிவிட்டுக் கிளம்ப முயன்றார்.
அவரை நிருபர்கள் விடவில்லை. தொடர்ந்து அதே கேள்வியைக் கேட்கவே, சிரிப்பை அடக்க முடியாத ராமதாஸ், இன்றைக்கு அரசியல் பேசப் போவதில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் உங்களை சந்திக்கிறேன். அப்போது முழுக்க அரசியல் பேசுவோம்.. போதுமா என்று கூறிவிட்டு தப்பினார்.












Click it and Unblock the Notifications