2வது முறையாக இன்று சிபு சோரன் முதல்வராக பதவியேற்பு

64 வயதாகும் சோரன் ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவியேற்பது இது 2வது முறையாகும். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சோரன் மீண்டும் முதல்வர் பதவிக்கு வருகிறார்.
மது கோடா தலைமையிலான அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க சோரன் ஆளுநரிடம் அனுமதி கோரினார். மது கோடா உள்ளிட்ட 42 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாக ெதரிவித்ததால் ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ரஸி அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று சோரன் முதல்வராகப் பதவியேற்கிறார். இன்று மாலை 3.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இன்று சோரன் மட்டுமே பதவியேற்பார் என்று தெரிகிறது. அமைச்சர்கள் பின்னர் பதவியேற்பார்கள்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மொரபாடி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறை முதல்வராகப் பதவியேற்ற சோரன் மொத்தம் 9 நாட்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்தார். பெரும்பான்மை பலம் அவருக்குக் கிடைக்காததால் 2005ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் அவர் மத்திய அமைச்சரானார். இப்போது மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வராகியுள்ளார். செப்டம்பர் 1ம்தேதிக்குள் சோரன் தனது அரசின் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சையத் சிப்தே ரஸி உத்தரவிட்டுள்ளார்.
தற்போது சோரன் தலைமையிலான கூட்டணியில் ஜேஎம்எம் 17, காங்கிரஸ் 9, ஆர்.ஜே.டி 7, ஐக்கிய கோவா ஜனநாயக கட்சி 2, ஜார்க்கண்ட் கட்சி 1, தேசியவாத காங்கிரஸ் 1, பார்வர்ட் பிளாக் 1, மது கோடா, ஸ்டீபன் மராண்டி, ஹரிநரய் ராய், பானு பிரதாப் சஹி ஆகிய நான்கு சுயேச்சைகள் ஆகியோர் உள்ளனர்.












Click it and Unblock the Notifications