ஓராண்டுக்கு பின் பழனியில் மீண்டும் ரோப்கார்
பழனி: ஓராண்டுக்கு பிறகு பழனி மலையில் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்பட உள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் சேவை அடுத்த மாதம் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில். பழனி மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கடந்த அதிமுக ஆட்சியில் ரோப்கார் சேவைத் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 26.8.2007ல் ரோப்கார் விபத்து ஏற்பட்டது. இரும்பு கம்பி பாதையில் இருந்து விலகிய ஒரு ரோப்கார் பின்னால் வந்த கொண்டிருந்த ரோப்கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஒரு ரோப்கார அறுந்து 250 அடி பள்ளத்தில் விழுந்தது. அந்த ரோப் காரில் பயணம் செய்த ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து ரோப்கார் சேவை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பாதையை சீரமைக்கும் பணி உள்பட தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.1.50 கோடி செலவில் ரோப்கார் இயக்கும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு ஆன நிலையில், ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 2ம் தேதி ரோப்கார் சேவை தொடங்குகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பராமரிக்க எளிதான வகையில் புதிய ரோப்கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய ரோப்கார் முறை முற்றிலும் மாற்றப்பட்டு புதிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
293 மீட்டர் தூரத்தை 150 விநாடிகளில் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்தில் 768 பேர் பயணம் செய்யலாம். ரோப்கார் இயக்கத்தில் புட்ஸ்விட்ச் அமைக்கப்பட்டுள்ளது.
7 இடங்களில் எமர்ஜென்ஸி சுவிட்களும், காற்றின் வேகத்தை கணக்கிட அளவீட்டு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications