ரூ.6.5 லட்சம் தந்து 168 சென்னை மீனவர்கள் மீட்பு
சென்னை: ஆந்திர மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீனவர்கள் 168 பேரும் ரூ.6.5 லட்சம் கொடுத்து மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று தினங்களுக்கு முன் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 24 விசைப்படகுகளில் 168 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்களில் 49 பேர் 7 படகுகளில் ஆந்திரா மாநிலம் சென்னார்பாளையம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆந்திர மீனவர்கள், தங்களது வலைகளை தமிழக மீனவர்கள் அறுத்து விட்டதாகவும், அதற்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் கூறி அவர்களை இழுத்துச் சென்று சிறை வைத்தனர்.
இதே போல 119 மீனவர்கள் 17 விசைப் படகுகளுடன் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணாபுரம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களையும் ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.
இதையடுத்து காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இரண்டு குழுக்களாக ஆந்திரா விரைந்தனர்.
ஒரு பிரிவினர் சென்னார்பாளையம் சென்று, அங்கு சென்னை மீனவர்களை சிறை பிடித்து வைத்திருந்த ஆந்திரா மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு விசைப்படகுக்கு ரூ.20,000 வீதம் 7 படகுகளுக்கு மொத்தம் ரூ.1.40 லட்சம் இழப்பீடு வேண்டும் கேட்டனர் ஆந்திர மீனவர்கள். அதை ஏற்று காசிமேடு விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் பணத்தைக் கொடுத்து மீனவர்களை மீட்டனர்.
ரூ.5 லட்சம் கொடுத்து மீட்பு:
கிருஷ்ணாபுரம் பகுதிக்குச் சென்ற மற்றொரு பிரிவினர், காசிமேடு மீனவர்களை மீட்பது தொடர்பாக அங்குள்ள மீனவர்கள் சங்கத்துடன் பேச்சு நடத்தினார்கள். ரூ.5.10 லட்சம் கொடுத்து 119 மீனவர்களையும் காலையில் மீட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் சென்னை திரும்பிக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications