தொடரும் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்
கோவை: கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கோரி கடந்த 13 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர்கள் முன்னிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
கோவை மாவட்டத்தில் சோமனூர், பல்லடம், கருமத்தம்பட்டி, அவினாசி, சூலூர், மங்கலம், திருப்பூர் பகுதியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.
ஜவுளி உற்பத்தியாளர்கள் தரும் நூலுக்கு கூலி அடிப்படையில் விசைத்தறியாளர்கள் துணி நெய்து கொடுத்து வருகின்றனர். தொடர் மின்தடை, டீசல் விலை உயர்வு, விசைத்தறி உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்றவை காரணமாக நூறு சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சார்பில் வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பல்லடத்தில் கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு, நியாயமான கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
வேலை நிறுத்தம் காரணமாக தினமும் ரூ.40 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
மீண்டும் பேச்சுவார்த்தை:
இந்த நிலையில் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரநிதிகள், விசைத்தறி முதலாளிகள் ஆகியோருடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொங்கலூர் பழனிச்சாமி, அன்பரசன், மற்றும் ராமச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.